இளநிலை மருத்துவ கல்வியில் சேர இந்திய அளிவில் தேசிய தேர்வு முகமையால் NEET நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கொரோனா தொற்றின் காரணமாக நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனை அடுத்து திட்டமிட்டபடி நாளை தேர்வு நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 3,842 தேர்வு மையங்களில் 15,97,433 பேர் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் 14 நகரங்களில் நடைபெறும் தேர்வை 1,17,990 மாணவர்கள் எழுதவுள்ளனர். பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும் காலை 11 மணிக்கே தேர்வு மையத்துக்குள் இருக்க வேண்டும் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.
வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கிருமி நாசினி, குடிநீர் ஆகியவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டில் நீட் தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேடுகள் நடைபெற்றதன் எதிரொலியாக, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் கட்டாயம் சோதிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
மேலும், தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதில் ஹால் டிக்கெட், அடையாள அட்டை, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய குடிநீர் பாட்டில், விண்ணப்ப படிவத்தில் ஒட்டப்பட்ட Passport Size புகைப்படம், முகக்கவசம் உள்ளிட்டவைகள் மாணவர்கள் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post