ரயில்வே பாதுகாப்பு படை சிறப்பு நடவடிக்கையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விதிமுறை மீறி பயணித்த 12,000க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர்.
வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பயணச் சீட்டு இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அத்துமீறி நுழையும் செயல் தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அவதியடையும் பயணிகளின் புகார்களுக்கு பின் அவர்களை அப்புறப்படுத்தும் செயலை ரயில்வே காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பயணிகளுக்கு சிரமமில்லாத பயணத்தை உறுதி செய்யவும், அவர்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் கடந்த மாதம் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது. அதாவது, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் வேறு யாரும் ஏறாதவாறு தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரு இயக்கத்தை ரயில்வே பாதுகாப்பு படை ஆர்பிஎப் அறிமுகப்படுத்தியது.
இந்த நடவடிக்கையின் பலன் குறித்து ரயில்வே நிர்வாகம் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் பயணித்த 5,100க்கும் மேற்பட்ட நபர்கள் பிடிபட்டனர். இவர்களிடம் ரூ.6.71 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளை ஆக்கிரமித்து நுழைந்ததற்காக 6,300க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ.8.68 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இவர்கள் மீது ரயில்வே சட்ட விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரயில்களில் பயணிகளுக்கு தொந்தரவு அளித்ததாக மூன்றாம் பாலினத்தவர் மீது புகார்கள் அடிக்கடி தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட 1200க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.1.28 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. எதிர்காலத்திலும் ரயில்வே பாதுகாப்பு படை இது போன்ற நடவடிக்கைளை தொடரும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post