இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில், ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் நாடு தழுவிய நடை பயணத்தை தொடங்கினார். முதல்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நடைபயணம் நடைபெற்றது. பின்னர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து யாத்திரை தற்போது டெல்லியை அடைந்திருக்கிறது.
இரண்டு நாள்களுக்கு முன்னர் டெல்லியில் தொடங்கிய இந்த நடைபயணத்தில் திமுக எம்பி கனிமொழி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன், ராகுல் காந்தி ஆகியோர் உரையாற்றினர். தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை காலம் என்பதால் அடுத்தகட்ட நடைபயணம் ஒருவாரம் ஓய்வுக்குப் பின்னர் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ராகுல் காந்தி இன்று காலை முன்னணி தலைவர்கள் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி பின்னர், முன்னாள் பிரதமர்களான நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் நினைவிடங்களிலும் அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன் முன்னாள் பிரதமரும், பாஜகவின் இணை நிறுவனருமான அடல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்திலும் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். ஒரு முன்னணி காங்கிரஸ் தலைவரும், காந்தி குடும்பத்தை சேர்ந்தவரும் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது இதுவே முதல் முறை.
நேற்று, வாஜ்பாய் பிறந்ததினம் என்பதால், குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.அதற்கு அடுத்தநாளே ராகுல் காந்தியும் அங்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வு கவனம் பெற்றுள்ளது. ராகுல் காந்தியின் அடுத்தகட்ட நடைபயணம் ஜனவரி 3ஆம் தேதி மீண்டும் தொடங்கவுள்ளது.
Discussion about this post