சென்னை செங்குன்றம் நாறவாரிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் காதர். இவர் செங்குன்றம் பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் காதர் பயணிகளின் சவாரிக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது கையில் கட்டைப்பையுடன் வந்த பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டுனர் காதரிடம் கோயம்பேடு பேருந்து நிலையம் வரை சவாரி செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சவாரிக்கான கட்டணத்தை பேசிவிட்டு ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுள்ளார்.
அந்த பெண்ணோ கையில் வைத்திருந்த கட்டை பையை ஆட்டோவின் பின்புறம் வைத்துவிட்டு வேகமாக சென்றுள்ளார். இதனை அறியாத ஆட்டோ ஓட்டுநர், செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆட்டோவில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காதர், ஆட்டோவை நிறுத்திவிட்டு சோதனை செய்தார். அப்போது ஆட்டோவின் பின்புறம் இருந்த கட்டை பையில் பெண் குழந்தை ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் காவல்துறை ஆய்வாளர் சிவகுமார், இரண்டு மாத கைக்குழந்தையை மீட்டு முதல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த எழும்பூர் குழந்தைகள் நல அமைப்பினர் முதலுதவி சிகிச்சை முடிந்ததும் குழந்தையை மீட்டு தியாகராய நகர் உள்ள பால மந்திர குழந்தைகள் காப்பதில் குழந்தைகள் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆட்டோவில் 2 மாத கைக்குழந்தையை அநாதையாக தவிக்க விட்டுச் சென்ற பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Discussion about this post