பாஜகவுடன் கை கோர்க்க விசிக ஒருபோதும் தயங்காது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் விசிக மற்றும் அருமனை கிறிஸ்தவ இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் வெள்ளிவிழா மற்றும் சமூக நல்லிணக்க மாநாட்டில் திருமாவளவன் உரையாற்றினார்.
அதில், “மதத்தின் மீது நம்பிக்கை உள்ள சாதாரண மக்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சி தொடர்பு இருக்காது. அதுபோல் இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களிலும் சாதாரண மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார் மீதும் பகை வைத்துக்கொள்ள மாட்டார்கள்
இந்நிலையில் மதம் சார்ந்த இயக்கங்களான ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்கள் சமூக நல்லிணக்கணத்தை சீர்குலைக்கிறார்கள். ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்டவை, தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக, தாங்கள் விரும்பும் சமூகத்தை கட்டமைப்பதிற்காக, ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்காக மதங்களுக்கு இடையிலான வெறுப்பை வளர்க்கிறார்கள். மக்களின் உணர்வை பயன்படுத்தி, மதங்களுக்கு இடையே வெறுப்பை விதைக்கிறார்கள். அதை தான் விசிக விமர்சிக்கிறது.
ஆனால் பாஜகவை விமர்சித்தால் இந்து மதத்தை விமர்சிப்பதாக பாஜகவினர் கூறுகிறார்கள். விசிகவில் இருப்பவர்களில் 80% பேர் இந்துக்கள்தான். சமூகத்தில் இந்துக்கள்தான் பெரும்பான்மை மக்கள். பாஜகவினர் பேசும் அரசியல் வெறுப்பு அரசியலை தான் எதிர்க்கிகிறோம்.
மார்க்ஸ், அம்பேத்கர், பெரியாரின் அரசியலைதான் விசிக பேசுகிறது. ஹிந்து மதத்தில் இருக்கும் ஏற்றதாழ்வால் தான் யாரும் ஹிந்து மதத்தில் இணையவில்லை. பாஜகவினர் சமத்துவத்தை பேசினால், விசிக அவர்களோடு கைகோர்க்க தயங்காது. எங்களுக்கும் அவர்களுக்கும் அரசியலும், கொள்கைகளிலும்தான் முரண்பாடு” என்று தெரிவித்தார்.
இது நாள் வரை விசிக பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி வைக்காது என கூறிவந்த திருமாவளவன், தற்போது கூட்டணி வைக்க தயங்க மாட்டோம் என கூறியிருப்பது அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post