40 ஆண்டுகளாக தஞ்சாவூர் நெட்டி கலையை செய்து வரும் குடும்பத்தினர்!
தஞ்சை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குளத்தில் வளரும் நெட்டி எனப்படும் தண்டை எடுத்து அதிலும் கலை பொருட்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியமுறையில் தஞ்சை மக்களால் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெட்டி செய்முறை பற்றிய முழு தகவலையும் இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
நெட்டி என்றால் என்ன?
தஞ்சாவூர் நெட்டி என்பது தண்ணீரில் விளையும் ஒரு வித செடி வகையைச் சேர்ந்தது. தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள ஏரி , குளம் போன்றவற்றில் விளைகிறது. இதனுடைய நடுபாகம் தாமரை தண்டு போன்று நீளமாகவும், மேல்பகுதி சிறு சிறு கிளைகளாகவும் இருக்கும்.
இந்த நெட்டி டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்கள் வரை கிடைக்கும். இந்த நெட்டியைப் பறித்து வெயிலில் உலர்த்தி, பதப்படுத்தி அதில் கைவினைப்பொருட்கள், பரிசுப் பொருட்கள் செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய சிறப்புமிக்க கைவினைப் பொருட்களை புவிசார் குறியீட்டு பதிவகத்தில் பதிவு செய்ய தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகமான பூம்புகார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தியை நியமித்தது.
இதையடுத்து பூம்புகார் சார்பில் கடந்த 2013-ம் ஆண்டு இந்த நெட்டி வேலைபாடு புவிசார் குறியீடுக்காக விண்ணப்பிக்கப்பட்டு, 2014-ம் ஆண்டு டெல்லியில் ஏழு நபர்களைக் கொண்ட புவிசார் குறியீடு வல்லுநர் குழு முன்பாக சஞ்சய்காந்தி ஆஜராகி வாதாடினார்.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு சட்டப்பணிகளை மேற்கொண்டு கடந்த 2020 ஜனவரி 10-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு தற்போது மத்திய அரசின் புவிசார் குறியீடு கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
நெட்டி வேலைப்பாடு :
தஞ்சை மாவட்டங்களில் உள்ள ஏரி குளம் ஆகியவற்றில் செடியாக வளரும் நெட்டி இதில் தண்டு காணப்படும் இந்த தண்டினை எடுத்து வெயிலில் காய வைத்த பின்னர் மேல் தோலினை நீக்கிய பிறகு உள் அமைப்பானது வெள்ளை நிறத்தில் உருளை வடிவில் பஞ்சு போல் இருக்கும்.
இத்தகைய நெட்டி மூலம் கோயில் அமைப்புகள், உருவ அமைப்புகள், இயற்கை காட்சிகள், கட்டிட அமைப்புகள் மற்றும் வாழ்த்து மடல்கள் செய்யலாம்.
நெட்டியில் செய்யப்படும் கலைப்பொருள்கள் தந்தத்தில் செய்யப்பட்டவை போன்றே வெண்மையாக அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது.
இத்தகைய வேலைப்பாட்டின் சிறப்பாகத் திகழ்வது தஞ்சாவூர் பெரிய கோயில், மாமல்லபுரம் கடற்கரை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை என மட்டுமின்றி இயற்கை உருவ அமைப்புகள் உருவாக்கப்பட்டு அனைவரையும் கவர்ந்து இருக்கிறது.
தமிழர்களின் தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய விழாவான மாட்டுப்பொங்கலின்போது மாடுகளுக்குப் பயன்படுத்தும் மாலையினைச் செய்வதற்கு இந்த நெட்டி பயன்படுத்தப்படுகிறது. எனவே, இதன் பயன்பாடு என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழர்களின் வாழ்வோடு பிணைக்கப்பட்டு வருகிறது.
தனிச்சிறப்பு :
வேறு எந்த ஒரு பொருள்களையும் சேர்க்காமல் முழுவதும் நெட்டியை மற்றும் வைத்து செய்யப்படும், இந்த கலை பொருளானது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதன் வெண்மை தன்மை மாறாது. எந்த ஒரு இயந்திரத்தையும் பயன்படுத்தாமல் முழுவதும் கைகளை மட்டுமே பயன்படுத்தி செய்யக்கூடிய இந்த நெட்டியானது ஆயிரம் ஆண்டு பழமையானதாககும். இந்த நெட்டியை தஞ்சை மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் செய்து வருகின்றனர்.
Discussion about this post