ஜல்லிக்கட்டு போட்டி முடிந்த பின்னரும் காளைகளுக்கு சோதனை நடத்தப்படும் என தமிழ் நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
தமிழ் நாடு அரசின் ஜல்லிக்கட்டு அனுமதி சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இதன் மீதான விசாரணை நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வருகிறது.
ஏழாம் நாள் விசாரணையின் போது கலாச்சார அடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டிகளின் முக்கியத்துவம் குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்த்கி வாதங்களை முன்வைத்தார்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் கலாச்சாரத்தில் ஒரு பகுதியாகும் என குறிப்பிட்ட ரோஹ்த்கி அந்த நடைமுறை அவசியமானதா இல்லையா என நீதிமன்றம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? என வினவினார். விலங்கை வளர்க்கும் எஜமான் விரும்பியபடி விலங்குகள் செய்யும் என்றும் அதனை துன்புறுத்தல் என கருத முடியாது என்றும் வாதிட்டார். மனிதர்களின் நலனுக்காக செய்யப்படும் செயல்களை தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த நடைமுறைகளை மனித நலன் என எவ்வாறு கூறு முடியும். ஜல்லிக்கட்டு போட்டிகளால் மனித உயிரிழப்பு ஏற்படுகிறது என்ற மனுதாரர்கள் தரப்பு கூறுவதாகவும் அதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள் எனவும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து வழக்கறிஞர் ரோஹ்த்கி, கலாச்சாரம் என்பதே மனிதர்களின் நலனுக்கானது தான் என கூறினார். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த பல்வேறு வழிகாட்டுதல் நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக குறிப்பிட்ட ரோஹ்த்கி , எல்லா செயல்பாடுகளிலும் ஏதோ ஒரு வகையில் மனித உயிர்கள் பலியாவதாக கூறினார்.
போட்டிகளில் பங்கேற்கும் மாடுகளுக்கு போட்டிகள் முடிவடைந்த பின்னர் மருத்துவ சோதனைகள் செய்யப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு தரப்பு, போட்டிகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் காளைகளுக்கு சோதனைகள் செய்யப்படும் என உறுதி அளித்தது.
இதனை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தேனி தொகுதி அதிமுக எம்பி ரவீந்திரநாத், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகிய இடையீட்டு மனுதாரர்கள் சார்பாக வாதங்கள் முன் வைக்கப்பட்டது.
தனது 13 காளைகள் பல ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளதாகவும் வெளிநாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படுபவர்கள் தமிழ் கலாச்சாரம் குறித்து கூற எந்த உரிமையும் இல்லை என விஜயபாஸ்கர் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழ்க் கலாச்சாரம், விவசாயிகள் வாழ்வாதாரம் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கும் ஜல்லிக்கட்டை தடை செய்யக்கூடாது என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் எம்பி ரவீந்திரநாத் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.
பீட்டா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான், ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்த படவில்லை என்ற தமிழ்நாடு அரசின் வாதம் உண்மைக்கு புறம்பானது என கூறினார். நேரடியாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் காளைகள் காயமடைந்துள்ளதும், மனிதர்கள் உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளதாக ஷ்யாம் திவான் தெரிவித்தார். இதற்கான புகைப்பட ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஜல்லிக்கட்டு புகைப்படங்களை உங்களுக்கு எடுத்துக் கொடுத்தது யார்? விதிமுறைகள் மீறல் தொடர்பாக எங்கேனும் புகார் அளித்தீர்களா? புகைப்படங்களின் அடிப்படையில் மட்டும் முடிவுக்கு வர முடியுமா? என பீட்டா அமைப்புக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
Discussion about this post