2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 20 கோடி இந்தியர்கள் மிக மோசமான வெப்பக் காற்று பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று உலக வங்கி ஆய்வில் தெரிவித்துள்ளது.
புவி வெப்ப மயமாதல், கால நிலை மாற்றம் போன்ற சிக்கலால் கடந்த சில ஆண்டுகளாகவே பூமியின் சராசரி வெப்பநிலையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக பல்வேறு உலக நாடுகள் வெப்பக் காற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் வெப்பக்காற்று தாக்கம் குறித்து உலக வங்கி விரிவான ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 20 கோடி இந்தியர்கள் மிக மோசமான வெப்பக் காற்று பாதிப்புக்கு ஆளாவார்கள் என்று ஆய்வில் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போதைய நிலையை ஒப்பிடும் போது, 2037ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் குளிரூட்டும் சாதனங்களின் தேவை 8 மடங்கு அதிகரிக்கும். இதனால், அடுத்த 20 ஆண்டுகளில் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றம் 435 சதவீதம் அதிகரிக்கும் என ஆய்வில் கூறப்படுகிறது.போக்குவரத்து காரணமாக உருவாகும் மாசு மற்றும் வெப்பம் காரணமாக சுமார் 1.6 லட்சம் கோடி இழப்பு ஏற்படலாம்.
இந்த சூழலில் நாட்டில் மாற்றுமுறை ஆற்றல் உற்பத்தியில் கவனம் செலுத்தி வெப்பம் அதிகரிக்கப்போகும் இடங்களை குளிரூட்டி வைக்க பிரதான முதலீடுகள் செய்வதற்கான தேவைகள் உருவாகியுள்ளன. இந்த துறையில் இந்தியா எதிர்காலத்தில் 1.61 டிரில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் 37 லட்சம் பேருக்கு வேலைகள் உருவாகலாம். அத்துடன் மாற்று ஆற்றல் உற்பத்தியில் கவனம் செலுத்துவதன் மூலம் அடுத்த 20 ஆண்டுகளில் கார்பன்டை ஆக்சைடு வாயு வெளியேற்றத்தையும் வெகுவாக குறைக்க முடியும் என ஆய்வில் தெரிவித்துள்ளது.
இதற்காக உரிய கொள்கை முடிவுகள் வகுக்கப்பட வேண்டும். 2047க்குள் ஓசேனை பாதிக்கும் தன்மை கொண்ட ஏசி, பிரிஜ் போன்ற சாதனங்களை முற்றிலும் இல்லாமல் செய்வதை இலக்காக கொண்டு இந்தியா செயல்பட வேண்டும் என ஆய்வில் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே சர்வதேச நிறுவனமான லேன்செட் தனது ஆய்வறிக்கையில், 2000-2004 காலகட்டம் தொடங்கி 2017-21 காலகட்டம் வரையில் இந்தியாவில் பருவநிலை மாற்றத்தால் வெப்பக்காற்று பாதிப்பு காரணமாக நிகழ்ந்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளது.
Discussion about this post