ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்ற தமிழகத்தை சேர்ந்த 32 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரேணிகுண்டா, தமிழகத்திலிருந்து லாரி ஒன்றில் 30-க்கும் மேற்பட்டோர் செம்மரம் வெட்டுவதற்காக ஆந்திரா வருவதாக ஆந்திர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அந்த லாரியை பிடிப்பதற்காக ஆந்திர போலீசார் சோதனைச் சாவடி அமைத்து ரேணிகுண்டா அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த லாரி சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்றது. இதனைத் தொடர்ந்து போலீசார் லாரியை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு விரட்டிச் சென்ற பிறகு போலீசார் லாரியை தடுத்து நிறுத்தினர். லாரியிலிருந்த 32 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post