மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன் துணை நிலை ஆளுநர், தலைமைச் செயலாளர், நிர்வாகத்துறை சீர்திருத்த சிறகத்துறை செயலர் ஆகியோருக்கு தனித்தனியாக மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் கொண்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை துறை சார்ந்து செயல்படுத்த, புதுச்சேரி அரசில் 28 துறைகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பிரிவுகளும், அரசு தன்னாட்சி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. புதுவை அரசு தலைமைச் செயலகம், பல்வேறு துறைகளில் செயலர்கள், துறை சார்ந்த தலைவர்கள், இடைநிலை அதிகாரிகள் மற்றும் கடை நிலை ஊழியர்கள் என நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.
புதுச்சேரி அரசு பல்வேறு துறைகளும் சார்பு நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளாகவே துறை சார்ந்த நிர்வாகப் பணிகள், மக்கள் சேவைப் பணிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரது பரிந்துரைகள் போன்றவைகளை காலத்தோடு நடைமுறைப்படுத்தாமல் அலைக்கழித்து வரும் அவலமான நிலை புதுச்சேரி அரசு துறைகளில் ஏற்பட்டுள்ளது. அமைச்சர்களும், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும், மக்கள் கோரிக்கைகளையும், நலம் சார்ந்த திட்டங்களையும் நிறைவேற்றிட முடியாமல் திணறி வருகின்றனர். இத்தகைய நிலை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்பதே நிதர்சன உண்மையாகும்.
அமைச்சர் பெருமக்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களை சந்திக்கும் பொது மக்களிடம், பல்வேறு துறைகளின் செயல்படாத தன்மை குறித்து வாய்விட்டு வெளிப்படையாக பேசி வருகின்றனர். அனைத்து துறை அதிகாரிகளும், துறை சார்ந்த ஊழியர்களும், தாங்கள் பெறும் ஊதியத்திற்கு ஏற்ற வகையில் கூட பணி செய்யாமலும், பணிக்கு வராமலும், குறித்த நேரத்தில் வருகை பதிவேட்டில் கையொப்பமிடாமலும், சொந்த தொழில் மற்றும் குடும்ப வேலைகளை கவனித்து வருவதால், அரசுத் துறைகள் அனைத்திலும் நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
பொதுப்பணி, வருவாய், கலால், குடிமைப் பொருள் வழங்கல், சுற்றுலா, சமூக நலத்துறை, போக்குவரத்து, மீன்வளம், வேளாண், நீதி, நிதி, புள்ளியல்,நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை போன்ற 20-க்கும் மேற்பட்ட துறைகளில் பணி செய்யும் தலைமை அதிகாரிகளும், இடைநிலை அதிகாரிகளும், கடை நிலை ஊழியர்களும் சட்டப்படியாக அரசு குறித்த நேரமான காலை 8.45 மணிக்கு வருவதே இல்லை. அதேபோல் உணவு இடைவேளைக்குப் பிறகு 2.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை எந்தவொரு அரசு துறைப் பணியாளரும் வருகை என்பது முழுமையாக இல்லை. காவல், சுகாதாரம், மின்சாரம் மற்றும் கல்வித்துறை போன்றவைகளில் பணியாற்றும் தலைமை அதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் மற்றும் குறைபாடுகள் இருந்த போதும் மேற்கண்ட நான்கு துறைகள் மட்டுமே ஓரளவுக்கு பணியாற்றி வருகின்றன.
Discussion about this post