உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘கலகத் தலைவன்’ படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பை பெற்று வருகிறது.
அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.
ஒரு பக்கம் பொது சேவை, மறுபக்கம் சினிமா என்று தன்னை எப்போதும் பிசியாக இருக்கும் உதயநிதியின் அடுத்த படத்தை, ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இந்த படத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் தயாரிக்கிறது.
‘மாமன்னன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதனிடையே ‘தடம்’ பட இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ‘கலகத் தலைவன்’ படத்தில் நடித்திருக்கிறார். உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ள இந்த படத்தில் கலையரசன், பிக்பாஸ் ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோரெல்லி இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘கலகத் தலைவன்’ திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கலகத் தலைவன் பட வெளியீட்டை ரசிகர்கள் பலரும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் உமாமகேஸ்வரன், துணை செயலாளர் கிரண்குமார் தலைமையில் திரைப்படத்தை காண வந்த ரசிகர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகளையும், இனிப்புகளையும் வழங்கி வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகி விஜயசாரதி உட்பட 500 மேற்பட்ட ரசிகர் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.மேலும் நாகப்பட்டினம் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற தலைவர் சுரேஷ் முன்னிலையில் நாகை மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான கௌதமன் முதல் காட்சியை தொடங்கி வைத்து ரசிகர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் நாகை நகர செயலாளரும் நகர மன்ற தலைவருமான மாரிமுத்து மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Discussion about this post