திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே, லோகோ ஷெட்டில் பராமரிப்பு பணி முடிந்து ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்த ரயில் நேற்று (16.11.202) மாலை தடம் புரண்டது. இதனால் தென்னகத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் ரயில்கள் பல மணி நேரங்கள் தாமதமாக செல்கின்றன.
பொன்மலை பணிமனையில் ரயில் எஞ்சின் மற்றும் பெட்டிகள் பழுது பார்க்கப்படும். இது தவிர திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் ரயில் பராமரிப்பு பணிக்கான லோகோ செட் உள்ளது. நேற்று மாலை இந்த லோகோ செட்டில் இருந்து பராமரிப்பு பணி முடிந்து ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு 50 பெட்டிகள் கொண்ட ஒரு ரயில் புறப்பட்டது.
ஆனால், ரயில் நிலையத்திற்கு வருவதற்கு முன்பாகவே இன்ஜினில் இருந்து 2 மற்றும் 5வது பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. ரயில் தடம் புரண்ட தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடம் புரண்ட பெட்டிகளை சரி செய்து மாலை 4.30 மணி அளவில் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே கிராப்பட்டி பகுதியில் ரயில் வழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
தடம் புரண்ட இரண்டு ரயில் பெட்டிகளும் சரி செய்யப்பட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு உள்ளே கொண்டு செல்லப்பட்டன. இரண்டு மணி நேரம் காலதாமதமாக குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் திருச்சி ஜங்ஷன் நடைமேடைக்கு வந்தது. இதேபோல் திருச்சியில் இருந்து காரைக்குடி செல்லும் பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேஜஸ் அதிவிரைவு ரயில், காரைக்குடியில் இருந்து நாகூர் வரை செல்லும் பயணிகள் ரயில் திருச்சியில் இருந்து காரைக்குடி செல்லும் பயணிகள் ரயில் உள்ளிட்ட 5 ரயில்கள் காலதாமதமாக சென்று கொண்டிருக்கின்றன.
Discussion about this post