தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை வலியுறுத்தி கடந்த 2018ம் ஆண்டு பொதுமக்கள் நடத்திய போராட்டம் நூறாவது நாளை எட்டியதை தொடர்ந்து, மே.22ம் தேதியான அன்று பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.
அப்போது, அந்தப் பேரணி பெரும் வன்முறையாக மாறியது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து மே மாதம் 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
815 பக்க தீர்ப்பு அறிக்கையை வாசித்த நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டனர். தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது செல்லும் என்று கூறிய நீதிபதிகள், வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தனர். அப்போது குறுக்கிட்ட வேதாந்தா தரப்பு வழக்கறிஞர், 2 வாரம் தற்போதைய நிலை நீடிக்க கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால், இடைக்கால கோரிக்கையை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Discussion about this post