சென்னை:
திமுக உட்கட்சி தேத்தலுக்கான வேட்பு மனு தாக்கல் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 76 அமைப்பு மாவட்டங்களாக இருந்த திமுகவில் தற்போது நிர்வாக வசதிக்காக 72 மாவட்டங்களாக பிரித்து மறு சீரமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த 72 மாவட்டங்களில் அவை தலைவர், மாவட்ட செயலாளர், 3 துணை செயலாளர்கள், பொருளாளர் மற்றும் தலைமை கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய எண்ணிக்கை அடிப்படையிலான தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.
இன்று கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை, நெல்லை கிழக்கு, மத்தி உள்பட 21 மாவட்டங்களுக்கு மனு அளிக்கலாம். நாளை (23ம் தேதி) மேற்கு மாவட்டங்களான நீலகிரி, ஈரோடு வடக்கு, தெற்கு, திருப்பூர் வடக்கு, தெற்கு, கோவை உள்பட 21 மாவட்டங்களுக்கும், 24ம் தேதி புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கும், 25ம் தேதி வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கும் வேட்புமனு தாக்கல் நடைபெறவிருக்கின்றன.
திமுக அமைப்பின் 72 மாவட்டங்களுக்கான உட்கட்சி தேர்தலுக்கு வரும் 25ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் திமுக நிர்வாகிகள் தேர்வான நிலையில் தற்போது மாவட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
Discussion about this post